இன்று முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (24) லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதல் நாளில் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி, முதலில் பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர் அது தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டவும், குழந்தையின் பாதுகாவலரிடம் எழுத்துமூல அனுமதியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், குழந்தையின் பாதுகாவலரின் அனுமதியின்றி குழந்தைகளுக்கு ஒருபோதும் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. பல தாய்மார்கள் ஏற்கனவே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி நடவடிக்கைகள் விடுமுறை நாட்களிலும் அதே முறையில் மேற்கொள்ளப்படும்.

தம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திகதியை விசேட வைத்திய நிபுணர் குழந்தைகளின் பாதுகாவலருக்கு தெரியப்படுத்துவார் என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் அமெரிக்கா, ஜேர்மன், பிரித்தானியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளிலேயே போடப்படுகின்றன. இந்த வரிசையில் இன்று இலங்கையும் இணைகின்றது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளே சிறுவர் சிறுமியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.