அல்வாயில் 2 வீடுகள் தீக்கிரை; ரவுடி ‘வெட்டுக்குமார்’ சிக்கினார்.

யாழ்., வடமராட்சி அல்வாய் வடக்கு, மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாள்வெட்டுக் குழுவின் ரவுடியான ‘வெட்டுக்குமார்’ என்பவரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் தேடி வருகின்றனர்.

கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு, மகாத்மா கிராமத்தைச் சேர்ந்த வாள்வெட்டுக் குழு ரவுடியான வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் நேற்றுமுன்தினம் இரு வீடுகளுக்குப் பெற்றோல் ஊற்றி தீ வைத்த குறித்த கும்பல் அப்பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளின் ஜன்னல்களை உடைத்தும், சொத்துக்கள், உடமைகள் என்பவற்றுக்குத் தீ வைத்தும் அவற்றை நாசமாக்கியுள்ளனர்.

இந்நிலையில், ரவுடி ‘வெட்டுக்குமார்’ கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரன் ஜெயா என்ற ரவுடி உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளனர் எனத் தொியவருகின்றது.

இந்த ரவுடிக் கும்பலால் தினமும் அச்சத்துடன் வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.