பெர்னாண்டோ அதிரடியில் இலங்கை அபார வெற்றி!

ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிசங்கா, தினேஷ் சண்டிமல், கமிந்து மெண்டிஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ – தசுன் ஷானகா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ 83 ரன்களையும், தசுன் ஷானகா 51 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் முகமது நதீம் – நசீம் குஷி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 19 ரன்களில் ஓமனை வீழ்த்தி அசத்தியது.

Leave A Reply

Your email address will not be published.