எகிப்து, செக் குடியரசு மக்கள் சுற்றுலாவுக்காக காத்திருக்கின்றனர் – தூதுவர்கள் பிரதமரிடம் உறுதி.

தமது சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள், இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர்.

செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் மற்றும் எகிப்பு தூதுவர் ஹுசேன் எல் சஹர்தி ஆகியோர் பிரதமரை சந்தித்து தமது சேவை காலம் எதிர்வரும் வாரத்துடன் நிறைவுபெறுவதனை நினைவூட்டினர்.

தனது சேவை காலத்தின்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சகல ஒத்துழைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் இதன்போது குறிப்பிட்டார்.

எகிப்து தூதுவர் ஹூசேன் எல் சஹர்தி அவர்கள் கருத்து தெரிவித்த போது, தனக்கு கிடைத்த விருந்தோம்பல் மற்றும் தன்மீது காட்டப்பட்ட கருணைக்கு மிகுந்த நன்றி என குறிப்பிட்டார்.

அத்துடன் தமது சேவை காலத்தின்போது நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்பிலும் தூதுவர்கள் இதன்போது கௌரவ பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை,

மற்றும் முறையாகவும் பாதுகாப்பாகவும் நாட்டை திறக்க எமது அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், விடைபெறும் இராஜதந்திரிகள் இருவரும் அரசாங்கத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

தமது நாட்டு மக்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதனையும் அவர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டனர்.

முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் இதுபோன்று நாட்டை திறப்பதன் காரணமாக
இலங்கைக்கு வருகை தர எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் என்பதனையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேற்படி சந்திப்பின்போது தத்தமது நாடுகளினதும் எமது நாட்டினதும் மக்களிடையேயான பரஸ்பர உறவை உறுதிசெய்தல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு கலாசார உறவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வு பரிமாற்ற வேலைத்திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாகவும் அவர்கள் பிரதமருடன் கலந்துரையாடினர்.

Leave A Reply

Your email address will not be published.