தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை பதவியேற்ற ஊராட்சி பிரதிநிதிகள், இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தொடங்கியவுடன் உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும் என்றும், பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருந்தால் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகைக்காக 30 நிமிடங்கள் காத்திருக்கலாம் எனவும், கிராம ஊராட்சித் தலைவர் யாருக்கும் முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பதவிக்கு 2 பேர் போட்டியிட்டு சம வாக்குகளை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் எனவும், நடந்த முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இத்தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதியானவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.