உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறிய இங்கிலாந்து.

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஜோஸ் பட்லரின் அபாரமான சதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமலும், ஈயான் மோர்கன் 40 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணி ஆரம்பத்திலேயே பதும் நிஷங்கா, குசால் பெரேரா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா 21, அவிஷ்கா ஃபெர்னாண்டோ 13, பனுகா ராஜபக்ஷ 26, தசுன் ஷான்கா 26 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். பின் அவரும் 36 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.

Leave A Reply

Your email address will not be published.