கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றிணையுங்கள்! ஜே.வி.பி. அறைகூவல்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.”

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ‘ஊரிலிருந்து தொடங்குவோம்’ என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்த ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி சேதன விவசாயத்தை வலுக்கட்டாயமாகத் தான் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அராஜகம் காணப்படுகின்றது.

இந்த நாட்டில் தற்போது பால்மா, எரிவாயு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் இந்தக் கோட்டாபய அரசானது தனது குடும்ப ஆட்சியை மென்மேலும் அதிகரித்து இந்த நாட்டில் அராஜகம் புரிந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது .

நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில் ஒரு நெற்கதிர் என்றால் என்னவென்று தெரியாத ஜனாதிபதி தான் தற்போது விவசாயப் புரட்சி ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

விவசாயப் பெருமக்களுடன் கலந்துரையாடியே சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், விவசாயி அல்லாத விவசாயத்துறையைப் பற்றி தெரியாத ஒருவர் நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய தீர்மானங்களை எடுப்பது ஒரு வியப்பான விடயமாகும்.

இந்த ஆட்சியை மாற்றி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.