பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டால் கிறிஸ்மஸ் காலத்தில் இன்னொரு முடக்கம்!

நீண்ட வார இறுதி நாட்களில் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காது பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாட்டை இன்னொரு முடக்கத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் சுகாதார விதிகளை மறந்து ஒன்றுகூடலில் ஈடுபட்டால் நாடு ஒரு புதிய கொரோனா அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“பொறுப்பற்ற மற்றும் அறியாமை நடத்தையின் விளைவுகளை இரண்டு வாரங்களுக்குப் பிறகு உணர முடியும். அவ்வாறான நிலையில் பூட்டுதல் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே நிலைமை நீடித்தால் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.