இருவேறு இடங்களில் இருவர் படுகொலை!

இருவேறு இடங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமல்தெனிய வத்த பிரதேசத்தில், நபர் ஒருவர் மற்றுமொரு நபரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார் என்று தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிறிமல்தெனிய வத்த, தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 70 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலானது கைகலப்பில் முடிந்ததால் இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அந்த இடத்துக்கு வந்த மற்றுமொரு நபர் தாக்குதலை மேற்கொண்ட நபரைக் கூரிய ஆயுதம் மற்றும் கருங்கல்லால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, வீரக்கெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்குனயாய சந்தைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேகந்தவெல வடக்கு, வேக்கந்தவல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் வீரக்கெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.