இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 105 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் நேற்று டிக்ளேர் செய்தது. பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அதேபோல், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் டாம் லாதம் மற்றும் வில்லியம் சொமிர்வெலி ஆகியோர் களத்தில் இருந்தனர். இரு வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை வெகுவாக சமாளித்தனர்.

இதனால், உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. ஆனால் உணவு இடைவேளைக்குப்பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. பொறுப்புடன் விளையாடி வந்த டாம் லாதம் 5 ரன்னிலும், வில்லியம் 36 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள, மறுபுறம் ராஸ் டெய்லர்(2), நிக்கோலஸ்(1), டாம் பிளண்டல் (2) அடுத்தடுத்து வெளியேறினர்.

சிறிதுநேரத்திலேயே கேப்டன் கேன் வில்லியம்சனும் 112 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா சுழலில் வெளியேற, இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. நியூசிலாந்தில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், மறுபுறம் ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தை டிராவிற்கு கொண்டுசெல்ல போராடினார். கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், நியூசிலாந்து, ஆட்டத்தை டிரா செய்ய 12 ஓவர்கள் பேட் செய்ய வேண்டியிருந்தது.

இந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவும், அஜாஸ் படேலும் சாமர்த்தியமாக 12 ஓவர்களையும் எதிர்கொண்டு ஆட்டத்தை சமன் செய்தனர். கடைசி நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் இறுதிவிக்கெட்டை எடுக்கமுடியாமல் போனது. முடிவில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் ஆட்டம் சமனில் முடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.