வைத்தியசாலைகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை உடன் கைவிடுக! – சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை.

“மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அமைச்சரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்த அவர், மேலும் கூறுகையில்,

“மாகாண சபைகளின் கீழிருந்த பல அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு மத்திய அரசால் பறிக்கப்படுகின்ற, மீளப் பெறப்படுகின்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாகாண சபைகளுக்கு இருக்கின்ற நிதி, பொலிஸ், காணி அதிகாரங்கள் அரசமைப்பில் எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை எல்லாம் மாகாண சபைகளிடமிருந்து பிடுங்கப்பட்டு மரத்துக்குச் சேர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல்தான் மாவட்ட வைத்தியசாலைகளும் கடந்த ஆண்டிலிருந்து மாகாண சபைகளிடமிருந்து பறிக்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த நாட்டிலுள்ள 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை மாகாணத்திலிருந்து பறித்தெடுத்து மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கின்ற செயற்பாட்டை மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அதேபோல் பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் என்ற இனிப்பு முலாம் பூசப்பட்டு பல பாடசாலைகளை மத்திய அரசு உள்வாங்கியதையும் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கிவிட்டுப் பின்னர் அவற்றி பறித்தெடுக்கின்ற செயற்பாட்டை அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்ட வேண்டுமென்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.