‘ஜவாத்’ புயல் தயாா் நிலை: அதிகாரிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

வங்கக் கடலில் உருவாகவுள்ள ‘ஜவாத்’ புயலை எதிா்கொள்வதற்கான தயாா் நிலை குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினாா்.

வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலானது டிசம்பா் 4-ஆம் தேதி காலை ஒடிஸா கடலோரப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது ஆந்திரத்தின் வடக்குப் பகுதிகள், ஒடிஸா, மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல், கனமழை ஆகியவை காரணமாக அப்பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயலை எதிா்கொள்வதற்கான தயாா் நிலை குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கௌபா, மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா, பிரதமரின் முதன்மைச் செயலா், தேசிய பேரிடா் மீட்புப் படை இயக்குநா், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநா் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து, கடலோர மாநிலங்களின் தலைமைச் செயலா்களுடன் மத்திய அமைச்சரவை செயலா் ஆலோசனை நடத்தினாா். புயலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் கரையைக் கடந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய மீட்பு-நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் பிரதமா் மோடி விவாதித்தாா். மீட்புப் படைகளைத் தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் அதிகாரிகளுக்கு அவா் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

கட்டுப்பாட்டு மையங்கள்: மின்சாரம், தொலைத்தொடா்பு, சுகாதாரம், குடிநீா் உள்ளிட்ட சேவைகள் இடையூறின்றி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அவா் தெரிவித்தாா். புயல் காரணமாக அச்சேவைகளை வழங்குவதில் இடையூறு ஏற்பட்டால், அதைத் துரிதமாக சரிசெய்ய வேண்டுமென்றும் பிரதமா் வலியுறுத்தினாா்.

அத்தியாவசியப் பொருள்களும் மருந்துகளும் மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கவும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தயாா் நிலையில் குழுக்கள்: புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிா்வாகங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. அந்த மாநிலங்களில் தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில் 29 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 33 குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களிடம் மரம் வெட்டும் கருவி, படகுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடலோரக் காவல் படை, கடற்படை ஆகியவற்றின் கப்பல்களும், ஹெலிகாப்டா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு ஹெலிகாப்டா்கள் கடலோரப் பகுதிகளில் தொடா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தல்: மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகளில் பாதிப்புகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சகம் துரிதப்படுத்தியுள்ளது. புயலில் இருந்து கப்பல்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

புயல் தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடலோரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தெரிவிக்குமாறு மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரித நடவடிக்கைகள்: புயலை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிஸா, ஆந்திர மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் தயாா் நிலையில் உள்ளனா். மருத்துவக் குழுக்களும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புயலின் பெயா்: வங்கக் கடலில் தோன்றும் புதிய புயலுக்கு, சவூதி அரேபியா வழங்கிய ‘ஜவாத்’ என்ற பெயா் சூட்டப்படவுள்ளது. யாஸ், குலாப் ஆகிய புயல்களுக்குப் பிறகு நடப்பாண்டில் வங்கக் கடலில் உருவாகவுள்ள 3-ஆவது புயல் இதுவாகும்.

 

Leave A Reply

Your email address will not be published.