கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்.

அரசாங்கத்தின் சௌபாக்கியத்தின் நோக்கு தொனிப்பொருளின் அடிப்படையில் திறன் அடிப்படையிலான கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் (03) காலை 9.30மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிர்மானத்துறையில் அவசியமான கட்டடக்கலை பயிற்சிக்கான திட்டமாக அமையப்பெறவுள்ள குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை, கட்டடப் பொருட்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க ஹேரத் அவர்களடைய இணைப்பாளர் எட்வேட் கொஸ்தா அவர்களின் பங்கேற்புடன் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மேசன், தச்சு, கம்பி வளைப்பவர், குழாய் பொருத்துனர், மாபிள் பதிப்பவர் ஆகிய நான்கு துறைகளில் தொழிற்தகமை சான்றிதழை பெற்றுக்கொள்ளாது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் அல்லது ஈடுபட விருப்பமுடைய 18வயது தொடக்கம் 45 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பெருமளவில் ஆர்வத்துடன் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பயிற்சிசார் திட்ட அறிமுக உரைகளும், பயிலுனர்களுக்கான சீருடை மற்றும் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மாத பயிற்சியினூடாக தொழிற்தகைமை சான்றிதழும்(NVQ 3), பயிற்சிக்கான மாத கொடுப்பணவாக ரூபா 10,000 வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் நிர்மான கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் ரி.தினேஸ், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜி வில்வராஜா, NAITA உத்தியோகத்தர்கள், வளவாளர்கள் மற்றும் பயிலுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.