பிரியந்த குமார தியவதன எரித்து கொல்லப்பட காரணம் என்ன?

பாகிஸ்தான் – சியால்கோட்டில் வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த கனேமுல்லயைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதன என்பவரை கடுமையாகத் தாக்கி நடுவீதியில் எரித்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-லப்பைக் ( TLP) என்ற அமைப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

எரித்து படுகொலை செய்யப்பட்ட மேலாளர் பிரியந்த குமார தியவதன 40 வயது திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது சியால்கோட் மாவட்டம். இங்குள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையின் பொது மேலாளராக பணியாற்றினார்.

📌 நடந்த சம்பவம்
இவர் கடமையாற்றிய தொழிற்சாலையில் உள்ள தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” என்ற அரசியல் அமைப்பின் போஸ்டரை அவர் கிழித்து, குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது. அந்த போஸ்டர் அவரது அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. அதை அவர் கிழித்த போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இருவர் அதனை பார்த்துள்ளனர். பின்னர் அந்த தகவல் செவி வழி செய்தியாக பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சிலர் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்க ஆதரவாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இது “மத நிந்தனை” செயல் என்று தூண்டிவிடப்பட்டு நூற்றுக்கணக்கானோர் தொழிற்சாலைக்கு வெளியே திரண்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆவார்.

தொடர்ந்து பிரியந்த குமாரவை தொழிற்சாலையில் இருந்து இழுத்து வந்த இந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பிரியந்த குமார சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு, பொலிசார் அங்கு செல்வதற்குள் அந்த கும்பல் அவரது உடலை நடுரோட்டில் வைத்தே எரித்ததுள்ளனர்.

📌 தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) இயக்கத்தின் அமைப்பு
இந்த கொலையின் பின்னணியில் TLP என்ற அமைப்பு தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாகும், இது நாட்டில் தீவிரவாத இஸ்லாமியக் குழுவாகக் கருதப்படுகிறது.

இது 2015 இல் நிறுவப்பட்ட ஒரு சுன்னி முஸ்லிம் அமைப்பு.
பிரியந்த படுகொலை செய்யப்பட்ட காணொளியில், படுகொலையுடன் தொடர்புடைய சிலர் TLP கோஷங்களை உச்சரிப்பது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.


📌 தடை நீக்கம்.
இம்ரான் கானின் அரசாங்கம் TLP ஐ தடை செய்து பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட முடிவு செய்தது. அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, TLP கடந்த ஒக்டோபரில் லாகூரில் வன்முறை மோதல்களை உருவாக்கியது, குறைந்தது ஆறு பொலிஸ் அதிகாரிகளைக் கொன்றது.

இந்த மோதல்களை எதிர்கொண்டு, அரசாங்கம் ஒரு படி பின்வாங்கி, TLP மீதான தடையை நீக்க முடிவு செய்தது.

Police, TLP supporters clash in Pakistan's Lahore, area cordoned off; casualties expected - World News
📌 பின்னணி
TLP சம்பந்தப்பட்ட குற்றம் இது முதல் சம்பவம் அல்ல, கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறி முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிவைத்து பல கொலைகள் நடந்துள்ளன.

கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக வெறும் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வன்முறையைத் தூண்டி விடப்படுகின்றன. மேலும், மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலர் சமீப வருடங்களில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
📌பிரியந்த குமார தியவதன
பிரியந்த குமார தியவதன 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்றிருந்தார்.
1993 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்திப் பொறியாளராக இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.

2010 இல், பாகிஸ்தான் Crescent Textile Garment Factory தொழில்துறை பொறியியல் மேலாளராக சேர்ந்தார்.

அவர் 2012 இல் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸில் (Rajco Industries) சேர்ந்தார். இதன் பொது மேலாளராக இருந்துள்ளார்.

பிரியந்த கனேமுல்லை – வெலிபிஹில்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவரது இரண்டு மகன்களும் 14 மற்றும் 9 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது


📌பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விசாரணைகளை தாம் தனிப்பட்ட முறையில் கவனித்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். “சியால்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்” என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

📌 பஞ்சாப் மாநில முதல்வர் கண்டனம்.
பஞ்சாப் மாநில முதல்வர் உஸ்மான் Buzdar விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

📌ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கண்டனம்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு அரசாங்கமும் நீதி வழங்கப்படுவதையும் எஞ்சியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என நமப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத கும்பல் நடத்திய காட்டுமிராண்டித் தனமான மற்றும் கொடூரமான தாக்குதலைக் கண்டு இலங்கை அதிர்ச்சியடைகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– Nirujan Selvanayagam

Leave A Reply

Your email address will not be published.