புதுக்குடியிருப்பில் உயிரிழந்த 12 வயது சிறுமி கர்ப்பிணி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமியின் பிரேத பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

12 வயதுடைய யோகராசா நிதர்சனா கடந்த 15ஆம் திகதி காணாமல் போனதாக சிறுமியின் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அவரது வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் சடலம் கடந்த 18ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், கர்ப்பமாக இருந்த சிறுமியின் கருவை அகற்றும் போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால் சிறுமி உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.

முல்லைத்தீவு மூங்கிலாறில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலா றில் உயிரிழந்த சிறுமி நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 7ஆம் மாதம் மூங்கிலாற்றிற்கு வந்திருந்த நிலையில் மீண்டும் ஜனவரியில் திருகோணமலைக்கு கல்வி நடவடிக்கைக்கு செல்வதாக இருந்தது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது மூத்த சகோதரியின் கணவரான 34 வயதான அத்தானே காரணமென்பது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் மூத்த சகோதரியான 20 வயதான பெண், கடந்த மாதமளவிலேயே குழந்தை பிரசவித்திருந்தார்.

அவரது கணவனான 34 வயதானவர் ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் உயிரிழந்த சிறுமியின் சகோதரியை திருமணம் முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுமி வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், குறித்த நபரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.