கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கட்டளை இன்று ஓகஸ்ட் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை வத்திவைத்தது.

வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை கட்டளைக்காக பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

“கடற்தொழில் பிணக்குத் தொடர்பில் தீர்த்து வைக்கும் அதிகாரம் முழுமையாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு உண்டு.

மேலும் வடமராட்சியைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதியை வழங்கியுள்ளன.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை மீறி தொழில் இடம்பெறுவது தொடர்பில் விசாரணைகள் சாட்சியங்கள் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், விண்ணப்பத்தை நிராகரித்தது.

Comments are closed.