18 நாட்களில் ரூ.200 கோடி வசூலைத் தாண்டிய ‘புஷ்பா’

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வெளியான 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.219.68 கோடியை வசூலித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான படங்களில் இதுவரை ‘சூர்யவன்ஷி’ படமே அதிக வசூல் சாதனை செய்த படமாகக் கருதப்பட்டு வந்தது. அப்படம் வெளியான முதல் நாளில் வசூலித்த தொகை ரூ.26.29 கோடி. இதனைக் கடந்த டிச.16 அன்று வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படம் வெளியான முதல் நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்து முறியடித்திருந்தது. இவ்விரண்டு படங்களின் வசூலையும் முறியடித்து புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.219.68 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் படமான ‘83’ பாக்ஸ் ஆபீஸில் தடுமாறும் நிலையில் தென்னிந்தியப் படமான ‘புஷ்பா’ ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.