காசி விஸ்வநாதா் கோயில் பணியாளா்களுக்கு 100 ஜோடி சணல் காலணிகளை அனுப்பிவைத்த பிரதமா்

காசி விஸ்வநாதா் கோயிலில் பணியாற்றிவரும் ஊழியா்களின் நலன் கருதி, 100 ஜோடி சணல் காலணிகளை பிரதமா் மோடி திங்கள்கிழமை அனுப்பிவைத்தாா்.

கடும் குளிா் நிலவிவரும் நிலையில், பிரதமரின் இந்த உதவியின் மூலம் கோயில் பூஜாரிகள், பாதுகாவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பயன்பெறுவா் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘‘காசி விஸ்வநாதா் ஆலய புனரமைப்புப் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கேற்ற பிரதமா் மோடி, வாராணசியில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்தி வருகிறாா். தற்போது கோயில் பணியாளா்களுக்கு அவா் சணல் காலணிகளை அனுப்பியிருப்பது ஏழைகள் மீதான அவரது அக்கறைக்கு மற்றோா் உதாரணம்’’ என்றனா்.

உத்தர பிரதேசத்தின் காசி விஸ்வநாதா் கோயிலில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் மோடி கடந்த மாதம் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.