வங்காளதேசத்தை பந்தாடி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து.

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் டாம் லாதம் 252 ரன்களும், கான்வே 109 ரன்களும் குவித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 126 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அந்த அணியின் யாசிர் அலி (55), நுருல் ஹசன் (41) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர். நியூசிலாந்து அணியில் டிரென்ட் பவுல்ட் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அத்துடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பாலோ-ஆன் ஆன வங்காளதேச அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டு இருந்தன. ஆனால் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 102 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டை ராஸ் டெய்லர் வீழ்த்த வங்காளதேசம் 278 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

இரட்டை சதம் அடித்த டாம் லாதம் ஆட்ட நாயகன் விருதும், கான்வே தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.