மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் – விராட் கோலி.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டை தென் ஆப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 13ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் முகமது சிராஜ் இடம்பெறப்போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “எனது அணிக்காகச் சிறப்பாக விளையாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். எனவே நீண்ட காலமாக நன்றாக விளையாடி வருகிறேன். கடந்த ஒரு வருடமாக அணியின் பல முக்கியமான தருணங்களில் நான் பங்களித்துள்ளேன்.

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது நாங்கள் தரவரிசையில் 7ஆம் இடத்தில் இருந்தோம். இப்போது நாங்கள் நீண்ட நாளாகவே நெ.1 அணியாக உள்ளோம். எங்களிடம் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். எனவே யாரைத் தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் உள்ளோம்.

இதனால் எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. 3ஆவது டெஸ்டில் விளையாட நான் சரியான உடற்தகுதியுடன் உள்ளேன். கடந்த டெஸ்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து சிராஜ் தேறி வருகிறார். அவர் டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டிருப்பார் என நினைக்கவில்லை. முழு உடற்தகுதி இல்லாத ஒரு வீரரை டெஸ்டில் ஆடவைக்க வேண்டியதில்லை.

அதனால் 3ஆவது டெஸ்டில் சிராஜுக்குப் பதிலாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் முடிவெடுக்கவில்லை. பயிற்சியாளர், துணை கேப்டனிடம் இதுபற்றி கலந்து பேசி முடிவெடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.