கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய் ஷா.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

இத்தோல்வியைத் தொடர்ந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவித்தார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏனெனில் கடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி தற்போது டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் கோலி விலகினார்.

கோலியின் அறிவிப்பைப் பகிர்ந்து பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சிறந்த தலைமைப் பண்பால் டெஸ்ட் அணியை இதுவரை இல்லாத உச்சத்துக்கு அழைத்துச் சென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துகள். அவர் 68 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 40 ஆட்டங்களில் வெற்றி பெற்று வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதிவில் “இந்திய அணிக்கு சிறப்பான கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு வாழ்த்துகள். சிறந்த உடற்தகுதியைக் கொண்ட கருணையற்ற அணியாக, கோலி மாற்றிய இந்திய அணி, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெற்ற வெற்றி சிறப்பானது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.