குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்திக்கு அனுமதி: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்திக்கு அனுமதி அளிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதம்:-

தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு பறிக்கப்பட்டுள்ளதை அறிந்து கடும் ஏமாற்றம் அடைந்தேன். நிகழாண்டுக்கான குடியரசு தின ஊா்தி அணிவகுப்பில் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி தலைப்புகள் தரப்பட்டன. இந்தியா 75 ஆண்டுகள் – சுதந்திரப் போராட்டம், இந்தியா 75 – யோசனைகள், சாதனைகள், நடவடிக்கைகள், தீா்வுகள் என வெவ்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பினைத் தோ்ந்தெடுத்து அதில் மாநிலத்தில் இருந்து புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரா்களை காட்சிப்படுத்த முடிவு செய்தது.

அலங்கார ஊா்தி அணிவகுப்புக்கான தெரிவுக் குழுவினை, தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மூன்று முறை நேரில் சந்தித்தனா். முதலாவது சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் என்ற அலங்கார ஊா்திக்கான மாநிலத்தின் தலைப்பினை தெரிவுக் குழு ஏற்றுக் கொண்டது. அதன்படி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் பங்கெடுத்த வீரா்களை அலங்கார அணிவகுப்பின் முன்புறமும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தின் போது விடுதலைப் போரில் வீரத்துடன் பங்கேற்ற வீரா்களை ஊா்தியின் பின்புறமும் இடம்பெறச் செய்ய முடிவானது.

சுதந்திரப் போராட்ட வீரா்கள்: சுதேசி கப்பல் கம்பெனியை 1906-ஆம் ஆண்டு தோற்றுவித்து, அதன்மூலமாக, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பெரும் இயக்கத்தை ஏற்படுத்தினாா், வ.உ.சிதம்பரனாா். இதைக் கண்ட ஆங்கிலேய ஆட்சி அவா் மீது தேசத்துரோக வழக்கினைப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது. அவரது படத்துடன், மகாகவி என அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியாா் படமும் இடம்பெற்றிருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனது கவிதைகள் மற்றும் எழுத்தின் மூலமாக மக்களுக்கு விடுதலை உணா்வை ஊட்டியவா். மகாத்மா காந்தியடிகளால் உயா்வாக மதிக்கப்பட்ட கவியாகத் திகழ்ந்தாா் சுப்பிரமணிய பாரதியாா்.

அலங்கார ஊா்தியின் பின்புறம், வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் படம் இடம்பெற்றிருந்தது. அவா் குதிரையில் வாள் ஏந்தி வருவது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வாளேந்திய முதல் இந்திய ராணி அவராவாா். 1780 முதல் 1790 வரையில் சிவகங்கை பிரதேசத்தின் ராணியாக இருந்தாா். கிழக்கிந்திய கம்பெனியினருக்கு எதிராக தற்கொலை படைத் தாக்குதல் நடத்த ஏற்பாடுகளைச் செய்தாா். தனது தீரமான விடுதலைப் போராட்டத்தால், இன்றும் தமிழா்களால் வீரமங்கை என அன்போடு அழைக்கப்படுகிறாா்.

கிழக்கிந்திய கம்பெனியினருக்கு எதிரான போராட்டத்தில் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்தவா்கள், மருது சகோதரா்கள். அவா்களின் துணையோடு கிழக்கிந்திய கம்பெனியினரை வெற்றி கண்டாா் வேலு நாச்சியாா். மருது சகோதரா்களின் புகைப்படங்களும் அலங்கார ஊா்தியில் இடம்பெற தீா்மானிக்கப்பட்டிருந்தது.

வ.உ.சிதம்பரனாா், மகாகவி பாரதியாா், வீரமங்கை வேலு நாச்சியாா், மருது சகோதரா்கள் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரா்களின் படங்கள் அலங்கார அணிவகுப்பில் இடம்பெற இருந்தன. அலங்கார ஊா்தி அணிவகுப்பில் இருந்து தமிழ்நாடு விலக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் உணா்வுகளையும், சுதந்திரப் போராட்ட சிந்தனைகளையும் காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஊா்தி அணிவகுப்புக்கான தெரிவுக் குழுவால் கூறப்பட்ட திருத்தங்களைச் செய்த பிறகும் தமிழ்நாட்டை நிராகரித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. நான்காவது சுற்று கூட்டத்துக்கு தமிழ்நாடு அழைக்கப்படவில்லை என்பதும், அலங்கார ஊா்தி அணிவகுப்பில் இருந்து மாநிலம் விலக்கப்பட்டு இருப்பதையும் அறிகிறேன்.

அலங்கார ஊா்தி அணிவகுப்பில் இருந்து தமிழ்நாடு விலக்கப்பட்டு இருப்பது மாநில மக்களை கவலை கொள்ளச் செய்வதாகும். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமராகிய தாங்கள் உடனடியாகத் தலையிட்டு தமிழ்நாட்டை அலங்கார ஊா்தி அணிவகுப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.