அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் பிரதானிகள் இடமாற்றம்….

சில அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளில் எதிர்வரும் வாரங்களில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நிறுவனங்களின் தலைவர்கள் மட்டும் மாற்றப்பட்டு, சில நிறுவனங்களுக்கு பணிப்பாளர் சபை புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு விரிவான மாற்றத்தை கொண்டு வரும் நம்பிக்கையில் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் பிரதானிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மில்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்த லசந்த விக்கிரமசிங்க அண்மையில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவ செயலாளர் ரேணுகா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த தெஷார ஜயசிங்க, அன்றைய தினம் ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டு மீண்டும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மக நெகும ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.