சிவகார்த்திகேயனை திட்டும் தனுஷ் ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஒரு பெரிய நன்றி கடிதத்தை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் நடிகர் தனுஷை குறிப்பிட்டு நன்றி தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி திட்டி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றோடு சினிமாவில் 10 ஆண்டுகள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம் இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம்

இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும் என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பத்திரிக்கை தொலைக்காட்சி இணையதள நண்பர்களுக்கு அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

எல்லாவற்றிற்கும் மேலாக என் தாய் தமிழுக்கும் என்னை மகனாக சகோதரனாக நண்பனாக குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும் என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி-தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள். எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பது. நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படும் வாழ்வதும் மட்டுமே என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும் – உங்கள் சிவகார்த்திகேயன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகாலம் சினிமாவில் பணியாற்றிய சக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் பொதுப்படியாக குறிப்பிட்ட சிவகார்த்திகேயன் மெரினா பட வாய்ப்பை அளித்த இயக்குநர் பாண்டிராஜின் பெயரை மட்டும் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிராக தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலரை மறந்து விட்டு நடிகர் சிவகார்த்திகேயன் இப்படியொரு நன்றி கடிதத்தை எழுதியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தனுஷ் ரசிகர்கள் தனுஷ் இல்லைன்னா நீங்க இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது என்றும் அவருக்கு நன்றி கூற வேண்டியது உங்களது கடமை என்றும் கமெண்ட் போட்டு திட்டி வருகின்றனர். அதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதில் கமெண்ட் போட்டு ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.