கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி.எம். கோபாலரெட்ணம் பதவியேற்பு!

கிழக்கு மாகாண மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி. எம்.கோபாலரெட்ணம் அவர்கள் நாளை 07.02.2022 திங்கட்கிழமை பி.ப 12.30 சுபநேரத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் இதன்போது கலந்துகொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். 1995 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை நிருவாக சேவை அதிகாரி என்பதுடன், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை மட்டக்களப்பு பட்டிருப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும் பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்தியா காமராஜர் பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார்.

இவர் தனது அரச சேவையில் தம்பலகாமம், ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி, திருக்கோயில், மற்றும்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும், இறுதியாக கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராகவும் கடமை புரிந்துவந்த இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரியான இவர் கடந்த 01.02.2022 ஆந் திகதி கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் அவர்களினால் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.