கோவையில் சுயேட்சையாக போட்டியிடும் ‘பஞ்சாப் தமிழர்’ – ஆதரவாக வீடியோ வெளியிட்ட சினிமா பிரபலங்கள்

கோவை மாநகராட்சி 71 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பஞ்சாபியான டோனி சிங்கிற்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி 71 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பஞ்சாபி டோனிசிங் என்பவர் போட்டியிடுகின்றார்.ஆனந்த் சிங் என்கிற டோனி சிங் 60 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகின்றார். பிறப்பால் பஞ்சாபி என்றாலும் பள்ளி, கல்லூரி படிப்புகளை கோவையில் முடித்துள்ள இவர் , கோவையில் எலெக்ட்ரானிக் கடையை நடத்தி வருகிறார். ஜல்லிகட்டு போராட்டத்தில் தமிழக இளைஞர்களுடன் இணைந்து போராடி கோவை மக்களின் அன்பை பெற்றுள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்த டோனி சிங் ,71 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்காக ஆர்.எஸ்.புரம் பகுதியில் பஞ்சாபி நண்பர்களுடன் சேர்ந்து வீதி ,வீதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றார். இவருக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலை , மின்விளக்கு வசதிகள் குடிதண்ணீர் பிரச்னைகளை தீர்க்க அரசியல் கடந்து தன்னை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று கூறும் டோனிசிங் ஓளிமயமான எதிர்காலம் என தமிழ்பாடலை பாடி அசத்தினார்.

தமிழ் பேசும் பஞ்சாபியான டோனிசிங்கிற்கு அவரது பள்ளி , கல்லூரி தோழர்களான இயக்குனர் பாக்கியராஜ், நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் சமூகவலைதளங்கள் மூலம் டோனி சிங்கிற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சி 71 வார்டு தேர்தலுக்கு பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கோவைவாசியான டோனிசிங் போட்டியிடுவதும், அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்கள் மூலம் நடிகர்கள் பிரச்சாரம் செய்வதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.