மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்கும்.

தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க
பிரேரணையை வாபஸ் பெற்றனர் முன்னணியினர்

“இந்தியத் தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புவேளை பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று புதன்கிழமை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் குறித்த பிரேரணை இன்று பிற்பகல் 4.50 மணியளவில் விவாதத்துக்குக் கொண்டுவரப்படும் வகையில் நாடாளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்காது, அவர்களது வலைகள் அழிக்கப்படுவதையும், படகுகள் சேதமாக்கப்படுவதையும், மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இலங்கைக் கடற்படையும் இலங்கை அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில், இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார். அதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காது எமது வடபகுதி மீனவர்களுக்கும் எல்லை தாண்டிவரும் மீனவர்களுக்கும் இடையில் மோதலைத் தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்தோம்.

அதன்போது, தூதரக அதிகாரி, இந்தப் பிரச்சினை தொடர்பில் தமது தரப்பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவதாகவும், மேற்படி மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஒரு நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்தவகையில் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.