துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடை.

உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இதை ஏற்று சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கால்பந்து, உலக தடகளம், ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட அந்த நாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரஷியா, பெலாரஸ் வீரர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த உலக கோப்பை போட்டியில் ரஷிய வீரர்கள் தொடர்ந்து பங்கேற்க முடியாது என்று தெரிகிறது.

இதற்கிடையே 2013-ம் ஆண்டில் ரஷிய அதிபர் புதினுக்கு வழங்கிய 9-வது டான் கவுரவ கருப்பு பட்டையை திரும்ப பெற முடிவு செய்து இருப்பதாக உலக தேக்வாண்டோ சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.