நிலைமை இன்னும் படுமோசமாகலாம்.! புடினுடனான பேச்சுக்குப் பின் நம்பிக்கை இழந்தார் மக்ரோன்.

உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை போரைநிறுத்தப் போவதில்லை என்பதில் புடின் உறுதியாக உள்ளார். அதனால் போர் நிலைவரம் இன்னும் மோசமாகலாம் என்று எலிஸே மாளிகை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

மக்ரோனின் கோரிக்கையின் பேரில் புடின் இன்று அவருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் தொலைபேசியில் பேசினார். அந்தப் பேச்சுக்குப் பின்னர் மக்ரோன் அவர் மீது”நம்பிக்கை இழந்துள்ளார்” என் றும் போர் மேலும் படுமோசமான கட்டத்துக்குச் செல்லக்கூடும் என்று அவர் எதிர்பார்கிறார் எனவும் எலிஸே மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன.

தொலைபேசி உரையாடலில் புடின், உக்ரைனுடன்”சமரசம் செய்யமுடியாத சண்டையைத்” தொடரப் போவதாகப் கூறியிருக்கிறார்.படை நடவடிக்கை திட்டமிட்டது போன்று முன்னேறிவருகிறது.நாசிஸத்தின் பிடியில் இருந்து உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை அது நீடிக்கும் என்றும் புடின் மக்ரோனிடம் கூறினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று மக்ரோன் விடுத்த கோரிக்கையைப் புடின் நிராகரித்து விட்டார்.

மக்ரோன் நேற்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “புடின் தன் பாட்டில் தனித்தே உக்ரைன் மீதான போரைத்
தெரிவுசெய்துள்ளார்” என்றும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது “தாக்குதல்” அல்ல, “துன்புறுத்தலே” என்றும் கூறியிருந்தார். மக்ரோனின் அந்தக் கூற்றுக்கள் புடினுக்கு ஆத்திரமூட்டியுள்ளன என்றும் அதற்காகக் கிரெம்ளின் தனது கண்டனத்தை வெளியிட்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டின் தெற்கில் முக்கிய பெரிய நகரமாகிய கெர்சன்(Kherson) ரஷ்யப்படைகளிடம் வீழ்ந்திருக்கிறது.

போரில் வீழ்ச்சியடைந்துள்ள முதலாவது உக்ரைன் நகரம் இதுவாகும்.மரியுபோல்(Mariupol), ஹார்கிவ் ( Kharkiv) ஆகிய அடுத்த பெரிய நகரங்களும் பலமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

கெர்சன் நகரின் வீழ்ச்சிக்குப் பின்னர் கருத்து வெளியிட்டிருக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov), அமெரிக்காவை”நாசி ஜேர்மனியுடன்” ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் சமாதானப் பேச்சுக் குழுவினருக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு பெலாரஸ் நாட்டின் போலந்து எல்லையில் ஆரம்பமாகியுள்ளது என்பதை இரு தரப்புகளும் உறுதிப்படுத்தி உள்ளன.பேச்சு மேசையில் தனது நிபந்தனைகளை அதிகரிக்கவுள்ளதாக மக்ரோனுடனான பேச்சுக்குப் பின்னர் கிரெம்ளின் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.