முதல் டெஸ்ட்: 4 ரன்களில் சதம் தவற விட்ட ரிஷாப் பண்ட்; இந்தியா 357/6.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

ரோகித் 29 ரன்களில் லகிரு குமாரா பந்துவீச்சில் ஆவுட்டானார். அடுத்ததாக 33 ரன்கள் எடுத்திருந்த மயங்க் அகர்வால் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்திருந்தது. ஹனுமா விகாரியும்(30), விராட் கோலியும்(15) களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் விராட் கோலி 45 (75 பந்துகள் 5 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். அவர், 38.2வது ஓவரில் பெர்னாண்டோ வீசிய பந்தில் ஒரு ரன் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 53 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்து உள்ளது. ஸ்ரேயாஸ் 14, ரிஷாப் பண்ட் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ், டி சில்வா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். தொடர்ந்து ரிஷாப்புடன் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்து விளையாடினார். இந்த போட்டியில், ரிஷாப் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்துள்ளார். இந்த நிலையில், ரிஷாப் பண்ட் 4 ரன்களில் சதம் தவற விட்டுள்ளார். அவர் 96 ரன்கள் (97 பந்துகள் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்திருந்தபோது, லக்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து உள்ளார். ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.