பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசு முழுமையாக நீக்கவேண்டும் நுவரெலியா கையெழுத்து வேட்டையில்..

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இந்தச் சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது 40 ஆண்டுகாலமாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இடையிடையே சிங்கள இளைஞர்கள் தண்டிக்கப்பட்டனர். தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர.

எனவே, இது மக்கள் கோரிக்கையாகும். அதனை அரசு நிறைவேற்ற வேண்டும்.நுவரெலியா மாவட்டத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.