அஸ்வினை புகழ்ந்த ரோஹித் சர்மா.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் கபில் தேவ் சாதனையை முறியடித்தார். இந்த ஆட்டத்தில் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இதுவரை மொத்தம் 436 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, தன் கண்களுக்கு எக்காலத்துக்கும் சிறந்த வீரராக அஸ்வின் தெரிகிறார் எனக் கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர் “அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த சாதனையை அடைந்திருப்பது மிகப் பெரிய விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது இதுபோன்ற விஷயங்களை எண்ணியிருக்க மாட்டோம். எனவே, இந்த சாதனையை முறியடித்திருப்பது மிகப் பெரிய சாதனை.

அஸ்வினை நீண்ட நாள்களாகப் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவர் முன்னேற்றம் கண்டு வருகிறார். அணிக்கு என்ன தேவை, தான் என்ன அடைய வேண்டும் என்பதற்கான தனது திறன் மீது எப்போதும் நம்பிக்கை வைப்பவர் அஸ்வின்.

எனது கண்களுக்கு அவர் எக்காலத்துக்கும் சிறந்த வீரர். நிறைய வருடங்களாக அணிக்காக விளையாடி வருகிறார். வெற்றிக்கான ஆட்டங்கள் நிறைய விளையாடியுள்ளார். எனவே, என்னைப் பொறுத்தவரை அவர் எக்காலத்துக்கும் சிறந்த வீரர். மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், எனக்கு அவர் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.