மகளிர் உலகக்கோப்பை; இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!

மகளிர் உலகக்கோப்பை 2022: இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

மகளிர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 62 ரன்களையும், ஏமி ஜோன்ஸ் 53 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் மரிசான் கேப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லிசெல் லீ 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதன்பின் 77 ரன்களில் வோல்வார்ட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Leave A Reply

Your email address will not be published.