ஐபிஎல் 2022: புதிய ஜெர்சியை வெளியிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது புதிய சீருடைய அறிமுகப்படுத்தியுள்ளது.

ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட அசத்தலான ஐபிஎல் 2022 தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அட்டவணையின் படி முதல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இம்முறை 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன.

இதை அடுத்து இந்த தொடரில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் விளையாடவுள்ள பல அணிகள் தங்கள் அணியின் புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் புதிய ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.