ராஜபக்ச சகோதரர்களால் நான் ஓரங்கட்டப்பட்டேன்! பீ.பி.ஜயசுந்தர கவலை.

ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டபோதும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தான் வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்த போதிலும் ஒரு தொலைபேசி அழைப்புக்கூட அவர்களிடமிருந்து வருவதில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், உடனடியாக ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டார்.

சில காலம் நிதி அமைச்சின் செயலாளராகவும் இருந்த அவர், ஏற்கனவே நாட்டில் சர்ச்சைக்குரிய நபராக இருந்தார். எனினும், 2 ஆண்டுகள் நிறைவடையும்போது பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டவர் இறுதியில் தனது பதவியை இராஜிநாமா செய்துகொண்டார்.

ஜனவரி மாதம் அவர் ஓய்வுபெற்றார். ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஜயசுந்தர, ஓய்வின் பின்னர் அனைவராலும் மறக்கப்பட்ட நபராக மாறியுள்ளார்.

இந்தநிலையில், அண்மையில் அரசின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்த அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“நான் எனது 40 வருட சேவை காலத்தில் பெரும்பகுதி ராஜபக்சக்களுக்காக உழைத்துள்ளேன். ஆனால், நான் ஓய்வுபெற்ற பின்னர் எவரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. தொலைபேசி அழைப்பேற்படுத்தி எனக்கு நன்றி சொல்லவில்லை. ஒருவரும் என்னிடம் பேசவில்லை” என்று விரக்தியுடன் உயர் அதிகாரியிடம் அவர் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.