சர்வகட்சி மாநாட்டில் ரணில் – கோட்டா மோதல்!

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றிக் கதைக்க முடியாது. இறுதியில் விஜய மன்னர் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை இருந்திருக்காது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.”

இவ்வாறு சர்வகட்சி மாநாட்டில் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிமரசிங்க.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைப் பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல. எனினும், குறுகிய அரசியல் நோக்கில், தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசுதான் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். அதற்கு என்னாலும் பதில் வழங்க முயும். பிறகு அவர் கருத்து வெளியிடுவார். அதற்கு நான் பதில் வழங்குவேன். அப்படியானால் இந்தப் பிரச்சினையைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கும்.

இறுதியில் விஜய மன்னன் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கும் வரக்கூடும். அதேபோல் எதிரணிகளைத் தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை. எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்ளும் நோக்கில்தான் வந்துள்ளோம்” – என்றார்.

அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு உங்களுக்கு ஏதேனும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகின்றோம். கடந்த கால நிலைவரம் பற்றியே அவர் கூறவிளைந்துள்ளார்” என்றார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பிலும் ரணில் இதன்போது கருத்து வெளியிட்டார். நிதி அமைச்சருடன் இது பற்றி விளக்கம் கோரினார்.

Leave A Reply

Your email address will not be published.