ஐ.நா.வில் ரஷியா தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை ரஷியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைனில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ரஷியத் தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷியா மற்றும் சீனா வாக்களித்த நிலையில், இந்தியா உள்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது.

முன்னதாக, ரஷியா நடத்தும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.