நானே பிரதமர் – தேசிய அரசு குறித்த தகவல் வதந்தி என்கிறார் மஹிந்த.

“தேசிய அரசு தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி. பிரதமர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் எனக்கு இல்லை. பதவிக் காலம் முடிவும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தேசிய அரசு நிறுவப்படும் எனவும், அந்த அரசின் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படும் எனவும் பரவலாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச,

“நாட்டில் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசு செயற்பட்டு வருகின்றது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கின்றது. உடனே ஓய்வுபெற மாட்டேன். தேசிய அரசு தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.

தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசு விரைவில் தீர்க்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.