தென் ஆப்பிரிக்கா வீரர்கள் குறித்து ஐசிசி-யிடம் புகார் அளிக்க வங்காளதேச கிரிக்கெட் அணி திட்டம்.

வங்காளதேச அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை வங்களாதேச அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் அணி 298 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடியது.

இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாது இன்னிங்சை ஆடிய வங்காள தேச அணி கேசவ் மகாராஜ் சுழலில் சிக்கியது. அந்த அணி 19 ஓவர் மட்டுமே விளையாடி 53 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. கேசவ் மகாராஜ் 10 ஓவர் பந்து வீசி 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்கா அணி ஸ்லெட்ஜிங்யில் ஈடுபட்டதற்காக வங்காளதேச அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்கவுள்ளது.

இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” ஏற்கனவே ஒருநாள் தொடரின் போது மிக மோசமான நடுவர் தீர்ப்புகள் எங்களுக்கு வழங்கப்பட்டதால் அப்போதே இது குறித்து ஐசிசி-யிடம் புகார் அளித்து இருந்தோம்.

மீண்டும் இந்த டெஸ்ட் போட்டியில் மோசமான நடுவரின் தீர்ப்புகள் குறித்து புகார் அளிக்கவுள்ளோம். அது மட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஸ்லெட்ஜிங்யில் ஈடுபட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்தும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம் ” என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.