தீபக் சஹாருக்கு மீண்டும் காயம்; தொடரிலிருந்து விலகல்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் ஆட்டங்களில் இரு அரை சதங்களை அடித்து தன் பேட்டிங் திறமையையும் அவர் வெளிப்படுத்தினார். 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் தீபக் சஹார். 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவற்றில் 42 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டத்தில் தீபக் சஹாரின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றார்.

அங்குக் கடந்த ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் காயம் முழுவதும் குணமாகி, ஏப்ரல் இறுதியில் சிஎஸ்கே அணியினருடன் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் விளையாடுவதற்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் தீபக் சஹாருக்கு முதுகிலும் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.