ரஷியாவில் மழலையர் பள்ளிக்கூடத்துக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி.

ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உலியானோவ்ஸ்க் பிராந்தியத்தில் மழலையர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பள்ளிக்கூடத்தில் இருந்த குழந்தைகள் பயத்தில் அலறி துடித்தனர்.

ஆனாலும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவுஇரக்கமின்றி தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளும், ஆசிரியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.