வேறு நபருடன் திருமணம்.. மண்டபத்தில் காதலியை சுட்டுக்கொலை செய்த காதலன்.. உபியில் பயங்கரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுராவில் மணப்பெண் அவரை காதலித்த நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மணப்பெண்னின் பெயர் காஜல் எனவும், இவர் மதுராவின் முபாரிக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. காஜல் என்ற அந்த பெண்ணை ஒரு நபர் ஒரு தலையாக நீண்ட காலம் காதலித்துவந்த நிலையில், அப்பெணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது கிராமத்தில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில்,திருமணத்தின் முக்கிய நிகழ்வான மாலை மாற்றும் சடங்கு இன்று காலை நடைபெற்றது. அதன் பின்னர் அப்பெண் தனது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் அறைக்குள் புகுந்து மணப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த மணப்பெண் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட இளைஞர் சம்பவயிடத்தை விட்டு உடனடியாக தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தபட்ட அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்த அந்த நபர்தான் இந்த கொலையை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. கொலையாளியை விரைந்து தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி கூறுகையில், ‘மாலை மாற்றும் நிகழ்வுக்குப் பின் பிரஷ் அப் செய்வதற்காக எனது மகள் ரூமுக்கு சென்றார். அப்போது ஒருவன் வந்து அவளை சுட்டுக் கொன்றுவிட்டான். என்னால் இதை நம்பவே முடியவில்லை’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரா காவல் கண்காணிப்பாளர் சிரீஷ் சந்திரா கூறுகையில், ‘இப்போது தான் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த பெண்ணுக்கும் அந்த நபருக்கு எந்தவிதமான தொடர்பு இருந்துள்ளது. குற்றத்தின் முழுமையான பின்னணி என்ன என்ற அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை செய்யவுள்ளோம்’ என்றார்.

மகிழ்ச்சியான திருமண வீட்டில் மணப்பெண் கொடூராமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.