‘மைனா கோ கம’ தீ வைத்து எரிப்பு! – இரும்புக் கம்பிகளுடன் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அட்டகாசம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துபவர்களால் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து, தீ மூட்டிக் கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டது.

இன்று அலரி மாளிகைக்கு நேரில் வந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள், மஹிந்தவைப் பதவி விலக வேண்டாம் எனக் கோரினர்.

அதன்பின்னர் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’வுக்கு வந்த அவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களைக் காண்பித்தனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.