கடலில் நீராடச் சென்ற 3 சகோதரர்கள் மாயம்! – செம்மலையில் சோகம்.

முல்லைத்தீவு, செம்மலைக் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

அளம்பில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலைக் கடலில் இன்று நீராடச் சென்றுள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர், அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் மீட்கும் முயற்சியில் ஏனைய இரு சகோதர்களும் ஈடுபட்டபோது, அவர்களும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பத்மநாதன் விஸ்வநாதன் (வயது 29), பத்மநாதன் விஜித் (வயது 26), பத்மநாதன் விழித்திரன் (வயது 22) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே காணாமல்போயுள்ளனர்.

தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் தாமதமடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.