கரூரில் பேருந்து கண்ணாடிகளை உடைத்த திருநங்கைகள், போலீசாருக்கும் அடி – பயணிகள் அவதி

கரூரில் நள்ளிரவில் திருநங்கைகளுக்கும், பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகளிடம் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் 2 அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலவரத்தை தடுக்க வந்த போலீசாருக்கும், செய்தியாளர்களும் அடி விழுந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரமாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர்.

கரூர் மாநகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப் பேருந்து நிலையத்திற்குள் இரவு அரசு நகர பேருந்தில் ஏறிய திருநங்கைகள் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது, பயணிக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓட்டுநரும், நடத்துனரும் பயணிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அடிதடியும் நடந்துள்ளது. அப்போது, திருநங்கைகள் பேருந்து நிலையத்திற்குள் இருந்த 2 அரசு பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளையும், பேருந்து நிலையத்திற்குள் இருந்த அலுவலகத்தின் கண்ணாடியும் உடைத்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக பயணிகளும், பொதுமக்களும் அலரி அடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே ஓடினர்.

அப்போது அங்கு வந்த போலீசார் திருநங்கைகளை சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயற்சித்தனர். இந்த கலவரத்தினை செல்போனில் படம் எடுத்த போலீசாரும், பயணிகளும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் தாக்கப்பட்டனர்.

இந்த கலவரம் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.