ரணிலை , பிரதமராக்க நடந்த காய் நகர்த்தல்கள் ….

‘Go Home Gata’ என ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளம் செயற்பாட்டாளர்கள் ஒரு மாத காலமாக உறக்கமில்லாமல் நடத்திய போராட்டம் தற்போது பல மைல்கற்களை கடந்துள்ளது. 

அதன் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லைப் பதித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமாவை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து சுதந்திரமாக செயற்பட்ட மைத்திரிபால மற்றும் விமல் அணியினர் மஹிந்தவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறும் பாராளுமன்றத்தைக் கலைத்து சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடத்துமாறும் கோரியிருந்தனர்.

இதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். மூத்தவரான டலஸ் அழகப்பெரும பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்பதும் புதிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதும் அவர்களது முறைசாரா உடன்படிக்கையாக இருந்தது.

திங்கட்கிழமை நாட்டை கலங்க வைத்த மகிந்த ஆதரவு அலரி மாளிகை  கட்சி தொண்டர்கள்!
அதே தினம் இரவில் நாடு முழுவதும் பரவிய தீ சுவாலைகள்!

எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை இரவு மொட்டு ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு வந்து , அலரிமாளிகைக்கு முன்பாக உள்ள மைனா கோ கிராமத்தையும்,  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள கோட்டா கோ கிராமத்தையும் தாக்கி அழித்ததையடுத்து இந்த இடைக்கால அரசாங்கம் குறித்த வதந்திகள் அனைத்தும் செல்லாத நாணயமாக மாறியது.

மகிந்த ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு முன்னர்,  அவர்கள் கொடுக்கும் அடியில்  இளைஞர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று மொட்டுவின் தலைவர்கள் நினைத்தார்கள், 

ஆனால் முற்றிலும் மாறுபட்ட பிரதிபலன் அனைவரையும் திகிலடைய வைத்தது. அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதலால் ஆத்திரமடைந்த பல்வேறு மக்கள் குழுக்கள், திங்கள்கிழமை இரவு அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை தாக்கி தீவைத்தனர். 

ஏறக்குறைய ஒவ்வொரு பெரிய நகரங்களிலும், இளைஞர்கள் ஒன்று திரண்டு, அரசு சார்பு ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்களையும் தாக்கி, தீ வைத்து எரித்தனர். ஏனைய குழுக்கள் கொழும்பை சுற்றிலும் அவ்வாறான பேருந்துகளை தாக்கி தீ வைத்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதிகாலை 2 மணியளவில் மஹிந்த அலரிமாளிகையை விட்டு வெளியேறினார்!

இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே பிரதமர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர் அலரிமாளிகையில் தங்கியிருந்தனர்.

அந்த கலவரத்திலிருந்து, மேலதிக படையினர் வந்து மஹிந்தவையும் அமைச்சர்களையும் அலரிமாளிகையில் இருந்து மீட்கும் போது மறுநாள் அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது.

அலரிமாளிகை வாளாகத்தில் சிக்கியிருந்த  மஹிந்த, பலத்த பாதுகாப்புடன் விசேடமான ஒரு  இடத்துக்கு சொண்டு சென்று தங்க வைக்கப்பட்டு,  செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு கெலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சஜித்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

அன்று நடந்த  கலவரத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மஹிந்த திங்கட்கிழமை மாலை அறிவித்ததையடுத்தே அந்த நிலை உருவானது.

எவ்வாறாயினும், தீயில் சூடுபிடித்த நாட்டை அமைதிப்படுத்த செவ்வாய்கிழமை முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் புதன்கிழமை தொடங்கியது.

இதன்படி ஜனாதிபதி ,  புதன்கிழமை காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை ஏற்குமாறு பணிப்புரை விடுத்தார்.

சஜித் ,  உடனடியாகப்  தன்னால் ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது என்றும், அன்று காலை,  குழுக் கூட்டத்தை கூடி இது குறித்து ஆலோசித்து பதில் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

சஜித் , கட்சியினரை அழைத்தார்! ஹரினுடன் சூடான உரையாடல்!

 

அதன்படி, புதன்கிழமை காலை ஆரம்பமான சஜித்தின் கட்சி குழு கூட்டத்தில் ,  ஜனாதிபதியின் பிரேரணையை சஜித் ,  குழுவிடம் முன்வைத்தார்.

முன்மொழிவுக்கு கலவையான பதில் ஒரு சிறப்பு சந்தர்ப்பமாக இருந்தது.

இந்த வேளையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கக் கூடாது என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவித்தனர்.

இன்னும் சிலர், ஜனாதிபதியின் கோரிக்கையை  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

ஏனையோர் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதியின் இராஜினாமாவே முழு நாடும் கோரும் முதலாவது நிபந்தனையாக இருக்க வேண்டும் எனவும் சஜித்திடம் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, ​​ இந்த நேரத்தில்தான் அரசாங்கத்தைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹரின் வலியுறுத்தினார்.

ஹரின் இந்தக் கருத்துக்களை மிகக் கடுமையாகச் சொன்னதால், ஒரு கட்டத்தில் ஹரினுக்கும் சஜித்துக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டது. ஆட்சியைக் எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்றார் அவர்.

ஆனால் அதை வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் கோட்டா கோ ஹோம் கோரி பல மாதங்களாக நாட்டின் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அப்படிச் செய்தால், கோட்டாவிடம் இருந்து பிரதமர் பதவியை மட்டும் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடியாது. அப்படி நடந்தால் நாட்டு மக்கள் ராஜபக்சக்களுக்கு செய்ததை எமக்கும் செய்வார்கள். எனவே அரசாங்கத்தை கைப்பற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என சஜித் தெரிவித்தார்.

அப்போது ஹரீன், தான் சுயாதீனமாக இருக்கப் போவதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சஜித்தும், ‘நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், சுயாதீனமான பிறகு  கட்சிக்கு திரும்ப முடியாது என்றார்.

மேலும் இப்படி என் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். அப்படியானால் வேறு ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்  என்றார் கடுப்பான சஜித் .

இறுதியாக அரசாங்கத்தை நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்வதுடன், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தூதுக்குழுவொன்றை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கபீர், ரஞ்சித், ஹர்ஷா, ஈரான் ஆகியோர் அதற்காக நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

ராஜபக்சக்கள் கலக்கம்! ரணிலை கொண்டு வர திட்டம்!

புதன்கிழமை காலை சஜித்தை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டபோது, ​​அதுவரை களத்தில் கண்ணுக்கும் தெரியாத ராஜபக்சக்கள் இச் செய்தி கேட்டு பீதியடைந்துள்ளனர்.

சஜித் பிரதமரானால் , ராஜபக்ச அரசியலிலும் மொட்டின் அரசியலிலும் கடும் நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்து அவர்கள் தனக்கு நெருக்கமான ஒருவரை தெரிவு செய்ய முடிவு செய்தனர்.

அவர்களின் தெரிவு வேறு யாருமல்ல, ராஜபக்சக்களுடன் எப்போதும் நெருங்கிய அரசியல் தொடர்புகளைக் கொண்டிருந்த UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்கவேயாகும்.

அதன்படி, மொட்டு கட்சியின் ஆதரவுடன் ரணிலை பிரதமராக்குவதற்கான பிரசாரத்தை மஹிந்த, பசில், நாமல் ஆகியோர் புதன்கிழமை முதல் ஆரம்பித்தனர். அவர்கள் உடனடியாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு தொலைபேசி வழி அறிவித்துள்ளனர். காமினி ஜனாதிபதிக்கு மட்டுமல்ல சஜித்துக்கும் இது குறித்து  தெரிவித்தார்.

பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் சஜித் தரப்பு வேண்டுகோள்! முடியாது என்றார் ஜனாதிபதி!

 

இவ்வாறு மகிந்த, பசில், நாமல் ஆகியோர் ரணிலை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான யுத்தம் ஆரம்பமான வேளையில் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியிடம் தமது நிபந்தனைகளை முன்வைத்தனர்.

ஜனாதிபதி பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும், அவ்வாறான நிபந்தனைகள் இன்றி அதிகாரங்களை மாற்றுவதற்கு உடன்பட முடியும் எனவும் ஜனாதிபதி நேரடியாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரணிலின் பிரேரணை ஏற்கனவே ஜனாதிபதியை சென்றடைந்திருந்ததால், விவாதங்கள் காட்டுத்தீ போல் பரவியதாகத் தெரிகிறது. இதனை உணர்ந்து கொண்ட சஜித் தரப்பு பிரதிநிதிகள் கலந்துரையாடலின் முடிவில் நிலைமையை சஜித்துக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த சஜித் , ஜனாதிபதியுடன் மேலும் கலந்துரையாடல் தேவையற்றது எனவும், மக்கள் ஆணையின் மூலம் அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை எதிர்க்கட்சியில் இருக்கலாம்  எனவும் தெரிவித்தார்.

ராஜபக்சக்களிடமிருந்து எந்த ஒரு அழைப்புமே இல்லை! தாக்கப்பட்ட எம்.பி.க்கள் கோபம்!

இதன்போது நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் போக்கு காணப்பட்டதுடன், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருந்தனர்.

மொட்டுவின் தலைவர்களான , மஹிந்த ராஜபக்ஷ, பசில் ஆகியோர் தமது சொத்துக்கள் தீக்கிரையான போதும், பாதுகாப்பற்ற நிலையில் பல்வேறு இடங்களில் தாங்கள் தங்கியிருந்த போதும் தொலைபேசி அழைப்பொன்றையாவது  மேற்கொள்ளவில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கோபமடைந்திருந்தனர்.

ஆனால், செவ்வாய்கிழமை மாலைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பசில் மற்றும் நாமலிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் ஏற்பட்டுள்ள சூடுபிடித்த சூழலை தீர்க்க தந்திரோபாய நம்பிக்கை கொண்டவராக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என பசில் மற்றும் நாமல் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.

மொட்டுக்கு திடீர் அழைப்பு!

எவ்வாறாயினும், இவ்வாறு ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு மொட்டுவின் தலைவர்கள் தொலைபேசியில் அழைப்பு விடுத்த போது, ​​அங்கத்தவர்கள் சிலர் கொதி நிலைக்கு மாறிக் காணப்பட்டனர்.

ஏனெனில் அப்போது வங்கி திருடன் என 24 மணி நேரமும் ரணிலை தாக்கிய அதே ரணிலை மீண்டும் பிரதமராக்க கை தூக்க வேண்டியிருப்பது விதியின் கேலிக்கூத்தாகிவிட்டதாக வருத்தப்பட்டனர்.

பல எம்.பி.க்கள் ஒருவரையொருவர் அழைத்து ரணிலுக்கு ஆதரவளித்து விட்டு, மீண்டும் கிராமத்தில் உள்ள கட்சிக்காரர்களால் அடி வாங்க  வேண்டி வரும் என தமது அச்சத்தை கூறினர். எனினும், பல எம்.பி.க்களும் தங்கள் கூட்டாளிகளுடன் தீர்மானத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தும் கொண்டனர்.

ரணில் , ஜனாதிபதிக்கு இருமுறை அழைப்பு!

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை, நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், ஜனாதிபதி கடுமையான நெருக்கடியில் இருந்தார். ரணில் ஜனாதிபதியை இரண்டு தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தமை விசேட நிகழ்வாகும்.

ஒருமுறை அழைப்பு விடுத்த ரணில், நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததோடு, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத காரணத்தால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி,  ரணிலிடம் தெரிவித்தார்.

பிரதமர் நியமிக்கப்படாததால் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்திருந்த நிலையில், காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரை நியமிக்க முடியாடலிருப்தாக  ஜனாதிபதி ரணிலிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதற்கான உதாரணங்களை சுட்டிக்காட்டிய ரணில், அவ்வாறான செயற்பாடுகள் பிரச்சனையாகாது என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதுடன் நம்பிக்கையளிக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.

சட்டமா அதிபரும் ரணிலை தொடர்பு கொண்டார்!

‘நீங்கள் நினைப்பது போல் இல்லை, எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் நடக்காது. இந்த நேரத்தில் முடிவெடுக்கும் அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. என்னை அழைக்க அட்டர்னி ஜெனரலிடம் சொல்லுங்கள். அதற்கு நான் விளக்கமளிப்பேன். ”ஜனாதிபதி சட்டமா அதிபரை அழைத்து, ரணிலுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுமாறு கூறினார்.

இதன்படி, சட்டமா அதிபர் ரணிலுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அதன் சட்ட நிலை குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்க ரணில் நடவடிக்கை எடுத்திருந்தார். ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களையும் ரணில் உதாரணமாகக் கூறினார்.

அதன்படி, அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் ரணிலுக்கு இறுதியாக தெரிவித்தார்.

ரணிலுக்கு நாமல் அழைப்பு!
ரணில் ஜனாதிபதியை சந்தித்தார்!

இதேவேளை, ரணிலை பிரதமராக நியமிக்கும் மொட்டுவின் தீர்மானம் குறித்து ரணிலுக்கு நாமலிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிரதமராக பதவியேற்க  தயாராகுமாறு,  ரணிலிடம் நாமல் தெரிவித்தார். அதன்படி, ரணில் தரப்பும் தேவையான பெரும்பான்மையை தேடும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையில் புதன்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரதமர் பதவி தொடர்பாகவும் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

சஜித்தின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன!

நிலமையை உணர்ந்த, சஜித் தரப்புக்கும் இந்த நிலையிலிருந்து மீள , கடுமையான நிபந்தனைகளை கைவிட்டு ஜனாதிபதியுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு  பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வர ஆரம்பித்தன.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் புதன்கிழமை சஜித்துடன் விசேட கலந்துரையாடலை நடத்தியது. ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை தளர்த்தி நான்கு நிபந்தனைகளின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க சஜித் தயாராக இருப்பதாக தீர்மானிக்கப்பட்டது. நான்கு நிபந்தனைகள் பின்வருமாறு.

  1. பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட குறைந்தபட்ச காலத்திற்குள் பதவி விலக சம்மதிக்க வேண்டும்.
  2. குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது ஜனாதிபதி எவ்வித செல்வாக்கையும் செலுத்தக் கூடாது.
  3. அரசியலமைப்பின் விதிகளின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மிகக் குறுகிய காலத்திற்குள் ஒழிக்கப்பட்டு அதற்கு அனைத்துத் தரப்பினரின் அனுமதியும் கோரப்படும்.
  4. மக்களுடைய வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிரந்தர ஆட்சி அமைக்க மக்களுக்கு விரைவில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அந்த நான்கு நிபந்தனைகள். இதன்படி ஜனாதிபதிக்கு உடனடியாக கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

பொன்சேகாவுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இதேவேளை, புதன்கிழமை இரவு ஜனாதிபதி மற்றுமொரு விசேட நபரை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அது வேறு யாருமல்ல, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதான்.

அழைப்பு கிடைத்தவுடன் பொன்சேகா சஜித்துக்கு இதுபற்றி தெரிவித்தார். சஜித்தின் அனுமதியுடன் பொன்சேகா அன்றிரவு ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார்.

பொன்சேகாவை பிரதமராக பதவியேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தமை நிகழ்வின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

எவ்வாறாயினும், ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என பொன்சேகா நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், ஜனாதிபதிக்கு எதிராக பொன்சேகா பல கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழு இரகசியமாக சென்று ஜனாதிபதியை சந்திக்கிறது!

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகிய ஐந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

எனினும் இந்த ஐவரும் ஜனாதிபதியை சந்திப்பார்கள் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிந்திருக்கவில்லை என்பதும் விசேட நிகழ்வாகும்.

பிரதமர் பதவி தொடர்பான கலந்துரையாடலின் போது, ​​அந்த பதவிக்கு ரணிலின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமல் சிறிபாலவும், அமரவீரவும், ரணிலை அப்பதவிக்கு நியமிப்பதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

மைத்திரிபாலவின் கோபம்!
நிமல் சிறிபால நாத்திக் கொண்டார்!

அதன் பின்னரே ஜனாதிபதியை ,  நிமல் சிறிபால, துமிந்த திஸாநாயக்க மற்றும் அமரவீர ஆகியோர் கட்சியின் சம்மதமும் இன்றி சந்தித்ததாகவும், அங்கு ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் மைத்திரிபால அறிந்தார்.

இந்த தகவலால் ஆத்திரமடைந்த மைத்திரிபால, உடனடியாக கட்சியின் செயற்குழுவை கூட்டி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடிவு செய்தார்.

கட்சியின் செயற்குழு பொதுவாக முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் கிராம மட்டத்திலிருந்து நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

அதன்படி, அவர்கள் கிராமத்தின் கருத்தை நன்றாக உணர்கிறார்கள். அப்போது ரணிலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு தாக்கியது, ரணிலால் எப்படி நல்லாட்சி அரசாங்கம் அழிந்தது என்பதை நன்கு அறிந்த அடிமட்ட உறுப்பினர்களை அழைத்து பின்னர் ,  பிரதமரை தீர்மானிப்பதே மைத்திரியின் நோக்கமாக இருந்தது.

மைத்திரி உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் , ரணிலுக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்த நிமல் சிறிபால மீண்டும் ஜனாதிபதியுடன் பேசி தானும் ரணிலுக்கு தானும் எதிரானவர் எனத் தெரிவித்தார்.

அப்படி சொல்லிவிட்டு , ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஜனாதிபதியுடன் மீண்டும் பேசிய நிமல் சிறிபால, ரணிலின் தேர்வுக்கு உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதையறிந்த மைத்திரிபால கட்சியின் நிறைவேற்று சபையின் கலந்துரையாடலின் பின்னர், நிமல் சிறிபாலவை கடுமையாக வசைபாடியுள்ளார்.

முன்னாள் அமைச்சரவை கூட்டத்துக்கு 15 பேர் மட்டுமே  வந்தனர்!

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களின் விசேட கூட்டத்தை கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

பீரிஸ், காஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம, விமலவீர திஸாநாயக்க, சன்ன ஜயசுமண, கனக ஹேரத், ஜனக வக்கும்புர, பிரமித பண்டார தென்னகோன் உட்பட சுமார் 15 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் வருத்தம் தெரிவித்ததோடு, முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுக்கு விசேட தகவல்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் நிபந்தனைகளை முன்வைத்து வருவதால், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களிடமும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ரணிலை அப்பதவிக்கு நியமிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அனேகமாக அனைவரும் தெரிவித்தனர். அதன்படி முன்னாள் அமைச்சர்களும் ரணிலுடன் பேச விரும்பினர்.

முன்னாள் அமைச்சரவைக்கும் ரணில் அழைப்பு! 13 கெட்ட நம்பர்!

அதன்படி உடனடியாக ரணிலை அழைத்து ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு ஜனாதிபதி கூறினார். சொன்னபடி சரியாக 1.30 மணிக்கு ரணில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார்.

முன்னாள் அமைச்சர்களுடன் 40 நிமிடம் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலை தொடர்ந்து ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடலை நடத்த ரணில் நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, ரணில் நிச்சயம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்வார் என வியாழக்கிழமை  முன்னாள் அமைச்சர்களுக்கு உறுதி மொழி கொடுக்கப்பட்டது.

ரணில் வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக அறிந்தனர். ஆனால், வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி எனவும், 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை துரதிஷ்டமான நாளாக பலர் கருதுவதாகவும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிரதமராக ரணில் பதவியேற்பார் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

 சஜித் தரப்பு நிலைமைகளை உணர்ந்து தமது நிபந்தனைகளை மேலும் எளிதாக்கியது!

இதேவேளை இது தொடர்பில் எதுவுமே தெரியாத எம்.பி.க்கள் குழுவொன்றும் மீண்டும் கூடி பிரதமர் பதவியை பிடிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தனர்.

நாடு மேலும் அராஜகமாகி வரும் நிலையில் ஆட்சியைக் கைப்பற்ற சஜித் தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவித்தனர். மேலும், சஜித்தின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் முன்மொழியப்பட்டது. அதன்படி, முந்தைய கடிதத்தின் விதிமுறைகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான்கு நிபந்தனைகள் பின்வருமாறு இருந்தன.

  1. குறிப்பிட்ட குறைந்தபட்ச காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுதல்.
  2. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை இரண்டு வார காலத்திற்குள் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்துதல் மற்றும் சட்டமாக்குதல்.
  3. நாம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வர்த்தமானியில் முன்வைத்த அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய நடைமுறைப்படுத்துதல்.
  4. மேற்கண்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், நிலையான அரசாங்கத்தை அமைக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கவும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அந்த நான்கு நிபந்தனைகள்.

கடிதத்தை எடுத்துச் செல்லும் போது உள்ளே ரணில்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் ஜனாதிபதியிடம் அடுத்த கடிதம் கையளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மாளிகையில் பிரதமரின் பதவிப் பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதியோடு அப்போது  கலந்துரையாடிக் கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இதனை அறியாத  சஜித் தரப்பு எம்.பி.க்கள்,  கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்தனர். கடிதத்தை கையளித்த பின்னர், ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். சஜித் அனுப்பிய கடிதம் கிடைத்ததா என்று கேட்டார்.

காமினி செனரத் ஹர்ஷாவிடம் கூறியது!

“கடிதம் கிடைத்தது. ஆனால் ஒரு பிரச்சினை உள்ளது” என காமினி செனரத் தெரிவித்தார்.

என்ன பிரச்சனை என்று ஹர்ஷ கேட்டதற்கு காமினி, “ரணிலுக்கு ஒரு வார்த்தை கொடுத்து விட்டோம். அதுதான் பிரச்சனை.” என்றார்.

அப்போது ஹர்ஷா, ‘‘பிரதமரை வாய்மொழி வார்த்தைக்காக  நியமிக்க முடியுமா? எனக் கேட்ட போது , காமினி தன்னை காப்பாற்றிக் கொள்ள ,  எதிர்க்கட்சித் தலைவரை அழைத்துக் கேட்டேன்தானே’ என பேச முயற்சித்த போது, ‘நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைவருமே ஆட்சியைப் எடுக்கலாம்’ . அந்த கடிதத்தின் மீது செயல்படுங்கள். ”என ஹர்ஷ ஆவேசமாக தெரிவித்தார்

அழைப்பு விடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.

அதேநேரம் ,  முன்னதாகவே வந்திருந்தால் , பிரதமர் பதவி கிடைத்திருக்கும் என ஜனாதிபதி பதில் கடிதமும் சஜித்துக்கு அனுப்பியிருந்தார்.

“என்னை இப்படி வரச் சொல்லவில்லைதானே?. இவ்வளவு சீக்கிரம் பதவியை கொடுக்க எப்படி முடிவு செய்தார்கள்? நாட்டின் பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்குப் பதிலாக, ராஜபக்சக்கள் மேலும் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்” என சஜித் சற்று உணர்ச்சியுடன் கடிதத்தை கண்டதும் பொங்கியெழுந்தார்.

“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியது வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை. ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காத்தான். மக்களிடம் எங்களுக்கு ஒரு கடமை உள்ளது. அதுதான் ‘ஜனாதிபதி கோட்டா வீடு செல்ல வேண்டும்’. பிரதமர் பதவியை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் போராட்டத்திற்கு துரோகம் செய்ய மாட்டோம். போராட்டத்திற்கு அமைய கோரிக்கைகளை முன்வைக்கிறோம்” என சஜித்துடன் இருந்த எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

“சிலர் ,  ராஜபக்சக்களைப் பாதுகாக்க பிரதமர் பதவிக்கு சென்றனர். ஆனால் சஜித்,  பிரதமர் பதவியை எடுக்க நினைத்தது ராஜபக்சக்களை துரத்த” என நளின் பண்டார தெரிவித்தார்.

அரசின் ஆயுட்காலம் செவ்வாய் கிழமை முடிவு!

எவ்வாறாயினும், இவ்வாறு ரணில் பிரதமரானாலும் இன்று செவ்வாய்கிழமை அரசாங்கம் மூன்று தீர்க்கமான விடயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பிரதி சபாநாயகர் தேர்தல் தொடர்பில், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதி மீதான நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணையை ஆகியவையாகும்.

இந்தமுறையும் பிரதி சபாநாயகர் பதவிக்கு தமது கட்சியின் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாக சஜித் தரப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

சஜித் தரப்பு மட்டுமன்றி ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளதால் அரசாங்கத்திற்கு இது மிகவும் முக்கியமானது.

மேலும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சி தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் ஏனைய குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன. ஜீவன் தொண்டமானின் கட்சிப் பிரதிநிதிகளும்  அரசாங்கத்துக்கு எதிராக உள்ளனர். 

இதன் பிரகாரம் இன்றைய செவ்வாய்கிழமை அரசாங்கம் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.

கபில புஞ்சிமான்னகே
தமிழில் : ஜீவன்

(கட்டுரை எழுதும் போது இருந்த நிலை , இறுதி நேரத்தில் மாறியுள்ளது. என்ன நடக்கும் என்பது இன்று தெரியவரும்.)

Leave A Reply

Your email address will not be published.