தினேஷுடன் சுமந்திரன், சாணக்கியன் கடும் வாக்குவாதம்!

நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை; மக்களுக்காகவே வந்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக சபைக்குத் தலைமை தாங்குவதற்காக இரா.சாணக்கியனை அழைத்தபோதும், சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன அதனைத் தடுத்தார்.

சபைக்குத் தலைமை தாங்குமாறு படைக்கள சேவிதர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய இரா.சாணக்கியன் தயாராக இருந்தபோதும், தினேஷ் குணவர்த்தன, சபாநாயகருக்கு அனுப்பிய சில தகவல்களின் அடிப்படையில் இரா.சாணக்கியனுக்குப் பதிலாக மற்றும் ஒருவர் சபைக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இது நாடாளுமன்ற உறுப்பினரான தனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என்று இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இதன்போது இரா.சாணக்கியனும், எம்.ஏ.சுமந்திரனும் தினேஷ் குணவர்த்தனவுடன் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

“நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை. மக்களுக்காகவே வந்தோம். ஆனால், இவ்விடயமானது ஜனநாயகத்தை மீறும் ஒரு செயற்பாடாகும். நாடாளுமன்றம் ‘மொட்டு’க் கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவின் (டீல்) வர்த்தகம் தொடர்பான விவாதத்தின்போது, நான் சபைக்குத் தலைமை தாங்குவதை தினேஷ் குணவர்த்தன விரும்பவில்லை” என்று இரா.சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.