கனவு பயத்தால் திருடிய சாமி சிலைகளை திரும்ப ஒப்படைத்த திருடர்கள் – கடவுள் மன்னிக்க கோரி கடிதம்..!!

கோயிலில் இருந்து சாமி சிலைகளை திருடிய பின் கெட்ட கெட்ட கனவுகள் வந்ததால் திருடிய சிலைகளை திருடர்கள் கோயிலில் திருப்பி வைத்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சித்தரகூட் பகுதியில் 300 வருட பழமை வாய்ந்த விஷ்ணு கோயில் உள்ளது. இந்த கோயிலின் 16 அஷ்டதாது சிலைகள் கடந்த மே 9ஆம் தேதி திருடப்பட்டது. இதன் மதிப்பு பல கோடிகளாகும். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோயில் பூசாரி புகார் அளித்த நிலையில், காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை பூசாரியின் வீட்டின் அருகே சாக்கு பை ஒன்று மர்மான முறையில் இருந்துள்ளது. அதில், தொலைந்து போன 16 சிலைகளில் 14 சிலைகள் இருந்துள்ளன. அத்துடன் அதில் ஒரு குறிப்பு சீட்டும் இருந்துள்ளது.

அதில், இந்த சிலையை திருடிய பின்னர் தங்களுக்கு மோசமான கனவுகள் வந்ததாகவும். இதையடுத்து பயந்து போன திருடர்கள் அந்த சிலையை திரும்ப ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் தாங்கள் செய்த தவறை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த சிலைகளை கைப்பற்றி சோதனை செய்து கோவிலில் பத்திரமாக வைத்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் காவல்துறை முடிவெடுத்துள்ளது. கிடைத்துள்ள தடயங்கள் மூலம் திருடர்கள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அன்மையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 30 வயதான பாபா ராவ் என்ற திருடன் கோயிலின் வெள்ளி நகைகளை திருடி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவர் பறித்த குழியிலேயே அவர் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளார். பின்னர் 20 கிராம் வெள்ளி நகைகளுடன் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Leave A Reply

Your email address will not be published.