உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது.
சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட்டு வருகின்றுது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடும் நிலவி வருகின்றது.

இந் நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.

இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.

இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, ‘இந்த பரிசோதனை முறை கொரோனா பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து பரிசோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த பரிசோதனை முடிவுகள் வெற்றியளித்திருக்கவில்லை.

Comments are closed.