அரசு நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்ட இளைஞ‌ர்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கொடைக்கானல் பூம்பாறை வயல் பகுதியில் சுமார் 10 சென்ட் அரசு வருவாய் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்ட இளைஞ‌ரை கொடைக்கான‌ல் காவ‌ல்துறையின‌ர் கைது செய்து விசார‌ணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை வயல் ம‌ற்றும் சுற்றுவ‌ட்டார பகுதிக‌ளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுவதாக‌ கொடைக்கானல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தக‌வ‌ல் அடிப்படையில் இப்பகுதியில் காவல்துறை த‌னிப் படையினர் அமைத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு வருவாய் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருந்ததை க‌ண்ட‌றிந்த‌ன‌ர். இத‌னை தொட‌ர்ந்து கஞ்சா பயிரிட்ட நிலத்தில் ச‌ந்தேக‌த்திற்கு இட‌ம‌ளிக்கும் வ‌கையில் நின்று கொண்டிருந்த‌ இளைஞனான பூம்பாறை வயல் பகுதியை சேர்ந்த திவாக‌ர் (28) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தங்களின் தேவைக்காகவும், வருவாய் ஈட்டுவதற்காக‌வும் நீண்ட நாட்களாக கஞ்சா செடிகள் பயிரிட்டு அத‌னை காய‌வைத்து ப‌க்குவ‌ப்ப‌டுத்தி சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இந்த இளைஞனை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து பயிரிட்டு இருந்த அனைத்து க‌ஞ்சா செடிகளையும் அப்புறப்படுத்தி, அழித்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் தனி படையினர் பறிமுதல் செய்தன‌ர்.

மேலும் இவர‌து கூட்டாளியான (ச‌கோத‌ர‌ன்) ஸ்ரீதரன் என்ற இளைஞனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.